தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 20வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா
பத்திரிகைச்செய்தி
17-02-2020



தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 20வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 17.02.2020 அன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois) நகரசபை விளையாட்டரங்க மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

அரங்க வாசலின் வரவேற்பு நிறைகுட விளக்குகளை திரு. திருமதி ரவிக்காந் தம்பதியினர் ஏற்றி வைத்தனர். தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவாக பொதுச்சுடரினை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக பணிப்பாளர் திரு. செ. சுந்தரவேல் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்களையும், போரினாலும், இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும், பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு அரங்கநிகழ்வு ஆரம்பமாகியது.

அரங்கின் மங்கள விளக்குகளை நடன ஆசிரியர்கள் மற்றும் சுவிஸ் நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்த நடன ஆசிரியர் திருமதி. தேவகி குழந்தைவேல் இணைந்து ஏற்றி வைத்தனர்.

அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் கரவொலியுடன் பிரான்சில் புகழ்பூத்த இருபத்தேழு நடன ஆசிரியர்களின், முன்னூறுக்கு மேற்பட்ட நடன மாணவ மாணவிகளின் 25 நடன வடிவங்கள் மேடையேற்றப்பட்டன. அனைத்து நடன மாணவ மாணவிகளும் ஓருவர்க்கு ஒருவர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி குருவிற்கும், தமை ஈன்ற பெற்றோர்க்கும், தமிழினத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

சிறப்பு நடனங்களாக ஜேர்மனியில் இருந்து கலந்து கொண்ட செல்வன் நிமலன் சத்தியகுமார் அவர்களின் இரு நடனங்களும், நேரடி நட்டுவாங்கம் இசை பாடலுடன், ஆடற்கலையகம் - கலாபவனம் திரு. அருள்மோகன் முருகையா அவர்களின் மாணவர்களின் நடனமும் இடம்பெற்றது. இதே வேளையில் சலங்கையின் 20 ம் அகவையை முன்னிட்டு சிறப்பு பாடல் ஒன்று உருவாக்கப்பட்ட்து. இப்பாடலுக்கான வரிகள் பாதா அவர்கள், இசை சாய்தர்ஷன் கண்ணன் அவர்கள், பிரான்சில் குரல் ஒலிப்பதிவு ஈழநிலா தில்லைச் சிவம் அவர்கள், பாடகர்கள் நமது இராகசங்கமம் பாடல் போட்டியில் தெரிவு செய்யபட்ட கோகுலதாஸ் சூர்யா, அக்‌ஷயன் விஜயேந்திரா, சிறீதரன் ஆரபி, தர்மகுலசிங்கம் உவ்வனா, மற்றும் தெய்வேந்திர குமார் லக்‌ஷா ஆகியோர். பாடலுக்கான சிறப்பு நடனத்தை திருமதி. அனுஷா மணிவண்ணன் அவர்களின் மாணவிகள் வழங்கி சிறப்பித்தனர்.

நமது கலை பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு அள்ளிக்கொடுத்துவரும் அசிரியர்கள் அனைவரும் ஒரே மேடையில் மதிப்பழிக்கப்பட்டனர். தாயகத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் விபரணம் திரையிடப்பட்டது. கருத்துரையினை ரான்சி நகரமன்ற உறுப்பினர்; திரு.அலன் ஆனந்தன், திரு. ரவிசங்கர், திரு. செங்கதிர் ஆகியோர் ஆற்றினர்.


பரதவிழா இங்கு வாழும் எமது இளையோரின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே, பரதவிழாவினூடாக எமது தாயக உறவுகள் பயன்பெறுகின்றார்கள். அந்த பெருமையெல்லாம் நடன ஆசிரியர்களையும் , மாணவர்களையும் , பெற்றோரையும் , வருகைதந்த மக்களையும் தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர்களையுமே சாரும்.

இந்நிகழ்வில் ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois) நகரசபை நகரபிதா, துணை நகரபிதா, ஒல்னே சுபுவா நகரமன்ற உறுப்பினர்கள், இரான்சி நகரமன்ற உறுப்பினர் , சென் செந்தெனிஸ் துணை நகரபிதா, நகரமன்ற உறுப்பினர், செவ்றோன் துணை நகரபிதா, நாடுகடந்த அரச பிரதநிதிகள், தமிழ்ச்சங்க பிரதிநிதிகள், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தக அதிபர்கள் மற்றும், தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் நடன மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி உச்சாகப்படுத்தினர்.


ஒலி ஒளி அருள் சொனோ திரு.அருளானந்தன், தொழில்நுட்ப உதவி திரு. செந்தூரன், திரு. கரிகாலன், திரு. சுதர்சன் ஆகியோர் வழங்க, ஆவணப் படப்பிடிப்பினை ஷான் டிரீம்ஸ் நிறுவனமும், புகைப் படப்பிடிப்பினை போட்டோ மணி அவர்களும் பதிவுசெய்தனர். இந்நிகழ்வினை திரு. விநாயகமூர்த்தி, திரு. ஜஸ்ரின், திரு. சுரேஸ் , திரு. அருள்மொழித்தேவன், மற்றும் செல்வி. சிவப்பிரியா, செல்வி. எழில் ஓவியா, செல்வி. தாரணி ஆகியோர் தொகுத்து வழங்கினர்

ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois) நகரசபையின் ஆதரவில் இடம்பெற்ற பரதவிழா அரங்கம் நிறைந்த மக்களுடன் 20:45 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்