தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 18வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா
பத்திரிகைச்செய்தி
25.02.2018

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 18வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 25.02.2018 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு செவ்றோன் நகரசபை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

அரங்க வாசலின் வரவேற்பு நிறைகுட விளக்குகளை திரு.திருமதி தங்கத்துரை தம்பதியினர் ஏற்றி வைத்தனர். தாயகவிடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவாக பொதுச்சுடரினை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக பணிப்பாளர் திரு. செ. சுந்தரவேல் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவீரர்களையும், போரினாலும், இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும், பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு அரங்கநிகழ்வு ஆரம்பமாகியது.

அரங்கின் மங்கள விளக்குகளை ரான்சி நகரமன்ற உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன், பத்திரகாளி தேவஸ்தான பூசகர் திரு. மகேந்திரன், தலைவர் திரு. கோணேஸ்வரன், உபதலைவர் திரு. கருணைராஜன் ஆகியோருடன் நடன ஆசிரியர்களும் இணைந்து ஏற்றி வைத்தனர்.

வாழ்துரையினை திரு. அலன் ஆனந்தன், பத்திரகாளி தேவஸ்தான பூசகர் திரு. மகேந்திரன் அவர்களும் வழங்கினர். அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் கரவொலியுடன் பிரான்சில் புகழ்பூத்த இருபது நடன ஆசிரியர்களின், முன்னூறுக்கு மேற்பட்ட நடன மாணவ மாணவிகளின் 35 நடன வடிவங்கள் மேடையேற்றப்பட்டன. அனைத்து நடன மாணவ மாணவிகளும் ஓருவர்க்கு ஒருவர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி குருவிற்கும், தமை ஈன்ற பெற்றோர்க்கும், தமிழினத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

தாயகத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் விபரணம் திரையிடப்பட்டதோடு பணிப்பாளர் திரு. சுந்தரவேல் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பரதவிழா இங்கு வாழும் எமது உறவுகளின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே,. பரதவிழாவினூடாக எமது தாயக உறவுகள் பயன்பெறுகின்றார்கள். அந்த பெருமையெல்லாம் நடன ஆசிரியர்களையும் , மாணவர்களையும் , பெற்றோரையும் , வருகை தந்த மக்களையுமே சாரும். நாம் இங்கு மக்களுக்கு பணியாற்ற பிரான்சு அரசு அனுமதித்துள்ளது ஆனால் தாயக மக்களுக்கு உங்களின் உதவியோடு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க இலங்கை அரசு புனர்வாழ்வுக் கழகத்தின் மீது விதித்த தடையை நீக்கி வழிவிடவேண்டும். அதற்காக நாம் முயல்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை நாடி நிற்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நாடுகடந்த அரச பிரதநிதிகள் , தமிழ்ச்சங்க பிரதிநிதிகள் , தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் , தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் நடன மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி உச்சாகப்படுத்தினர்.

அருள் சொனோ திரு.அருளானந்தன், தொழில்நுட்ப உதவி திரு. கரிகாலன் , வீடியோ K.S போட்டோ மற்றும் தென்றல் தயாரிப்பு , யாழ் தீபன் போட்டோ, கல்யாணி உணவகம் ஆகியோரின் அனுசரணையில் செவ்றோன் நகரசபையின் ஆதரவில் இடம்பெற்ற பரதவிழா நிகழ்சித்தொகுப்பினை திரு. அருள்மொழித்தேவன், திருமதி. அனுசியா ஆனந்தரூபன், திருமதி. அந்துஷா கந்தையா, திருமதி. கவிதா கரிகாலன் ஆகியோர் தொகுத்து வழங்கினர் இந்நிகழ்வில் ஐனூறுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க விழா 21 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம்
தொடர்புகட்கு: 01 40 38 30 74