கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் மீள்குடியமர்வு பூர்த்தியாகவில்லை அரச அதிபர் அறிவிப்பு
12 மார்ச் 2010

கிளிநொச்சி மாவட்டத்தில் 57 கிராம சேவையாளர் பிரிவுகளில் இதுவரை மீள்குடியேற்றம் நடைபெறவில்லை என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி ஆகிய உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் உள்ள 57கிராம சேவையார் பிரிவுகளில் மீள்குடியேற்றப்படவில்லை எனத் தெரிவித்த அவர், பூநகரி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் மாத்திரமே மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றம் முற்றாக பூர்த்தியடைந்துள்ளது என அரசாங்கம் தகவல் தெரிவித்திருந்தநிலையில், கிளிநொச்சி அரசாங்க அதிபரின் அறிவிப்பு ஆச்சரியமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய நலன்புரி நிலையங்களில் இன்னமும் 99 ஆயிரம் பேர் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவாகரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்று முன்நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நலன்புரி நிலைங்களில் 70ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கடந்த புதன்கிழமை பி.பி.ஸிக்கு தகவல் அளிக்கையில் கூறியவை வருமாறு
நலன்புரி நிலையங்களில் 70ஆயிரம் பேர் உள்ளனர். ஏனையவர்கள் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். 2 லட்சம் பேரை நாம் மீள்குடியமர்த்தியுள்ளோம். ஆதலால் இது ஒரு பாரிய பிரச்சனை யல்ல. இன்னும் ஓரிரு மாதங்களில் 100 வீதமும் குடியமர்த்திவிடுவோம்.
எமது நோக்கம் மக்களைக் குடியமர்த்துவதே. நாம் இதனை ஐ.நா. சபைக்குப் பயந்தோ அல்லது மேற்குலக நாடுகளுக்குப் பயந்தோ செய்யவில்லை. நாம் ஜனவரி 31ஆம் திக திக்கு முன்னர் மீள்குடியமர்த்தி முடிக்க எண்ணியிருந்தாலும் மிதிவெடிகளை அகற்றக் காலதாமதம் ஆனதே எமக்குப் பெரிய சவாலாக இருந்தது.
முகாங்களில் உள்ளவர்களது தரவுகளை ஐ.நாவும் மீள்குடியேற்ற அமைச்சும் இணைந்தே வெளியிடுகின்றன என்றார்.
நிவாரணக் கிராமங்களில் இன்னும் 93 ஆயிரத்து 800 பேர் மட்டுமே:வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டோரில் 4942 பேர் திரும்பவில்லை!
இடம்பெயர்ந்த மக்களுள் இன்னமும் 93,823 பேர் மட்டுமே மீளக் குடியமர்த்தபடவுள்ளதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
கடந்த மார்ச் 10ஆந் திகதிய கணக்கின்படி வவுனியாவில் உள்ள முகாம்களில் 61,898 பேர் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 1347 பேர் உள்ளனர். வைத்தியசாலைகளில் 1604 பேருமாக மொத்தம் 64849 பேர் முகாம்களில் உள்ளனர் என்று கூறிய அமைச்சர் சுதந்திரமாக நடமாட 24032 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் மேலும் 4942 பேர் குறித்த தினத்தில் திரும்பி வரவில்லையென்றும் கூறினார்.இவ்வாறு 28974 பேர் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
|